பெற்றோர்கள் மீது புகார் செய்யலாம்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் அறிவுரை!
Police advice in the awareness program
பெண்கள் நிறைய துறையில் சாதனையாளர்கள்! செல்போன் பயன்பாட்டை குறையுங்கள்!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை மற்றும் சின்னம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பென்னாகரம் காவல் நிலைய ஆய்வாளர் வானதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளர் வானதி "பள்ளிக்குச் செல்லும் போது பெண் குழந்தைகள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் செல்ல வேண்டும். இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்கள் நன்கு படித்து நல்ல ஒழுக்கத்தை கற்று ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
பள்ளி செல்லும் போது யாராவது கிண்டல் செய்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசின் இலவச சேவை எண்ணான 1098 மற்றும் 181 ஆகிய எண்ணிற்கு அழைத்து புகார் செய்யலாம். பெற்றோர்கள் மது அருந்துவிட்டு வீட்டில் பிரச்சனை செய்தால் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம். பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி மதுவால் ஏற்படும் பிரச்சனைகளால் எடுத்துரைத்து தீர்வை தருகிறோம். உங்களின் புகார்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என பேசினார்.
மேலும் பேசுகையில் குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது, அதை குறைத்து படிப்பில் காலம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை யாரேனும் தவறான அணுகு முறையில் தொட்டாலோ பேசினாலோ போலீசாருக்கு தைரியமாக தகவல் சொல்லுங்கள் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெண்ணாகரம் காவல் ஆய்வாளர் வானதி தலைமைக் காவலர் நதியா, பேபி ஆகியோருடன் பெரும்பாலை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன், ஆசிரியர் சதாசிவம், சின்னம்பள்ளி தலைமையாசிரியர் பசுபதி, ஆசிரியர் அருள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
English Summary
Police advice in the awareness program