பா.ம.க. மூத்த நிர்வாகி மறைவு! மருத்துவர் இராமதாசு இரங்கல்!
PMK Senior administrator passed away
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறுபான்மை அணித் தலைவராக பணியாற்றியவரும், எனது அன்பிற்கு உரியவருமான ஹாஜி அப்துல் ஹமீது காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "நாகை மாவட்டம் நீடூரைச் சேர்ந்த அப்துல்ஹமீது கடந்த 24 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வந்தார். நாகை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராகவும், சிறுபான்மை அணித் தலைவராகவும் பணியாற்றிய அப்துல்ஹமீது, நீடூர் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூக, சமுதாய நல்லிணக்க மாநாடுகள் நடத்தப்பட்ட போது, அவற்றுக்காக ஹமீது முன்னின்று பணியாற்றினார்.
தருமபுரி தொகுதி மக்களவைத் தேர்தலில் மருத்துவர் அன்புமணி இராமதாசு போட்டியிட்ட போது, அவருக்காக சிறப்பான முறையில் களப் பணியாற்றினார். கட்சியினர் அனைவரிடமும் அன்பாகவும், பாசமாகவும் பழகுவார். என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும், விசுவாசமும் கொண்டவர். அப்துல் ஹமீது மறைவின் மூலம் மிகச் சிறந்த பண்பாளர் ஒருவரை பாட்டாளி மக்கள் கட்சி இழந்து விட்டது.
ஹாஜி அப்துல் ஹமீது அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Senior administrator passed away