மருத்துவர் இராமதாஸ், அன்புமணி இராமதாஸ் மே 1 தொழிலாளர்கள் தின வாழ்த்து செய்தி.!
PMK Dr Ramadoss and Anbumani Ramadoss Greetings about May 1 Labor Day 2021 Wish
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் பாட்டாளிகள் நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, " உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14-ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.
பாட்டாளிகள் தான் இந்திய நாட்டின் முதுகெலும்பு ஆவர். அந்த முதுகெலும்புகள் இப்போது முறிந்து கிடக்கின்றன. கொரோனா வைரஸ் என்ற கொடிய கிருமி அனைத்தையும் தலைகீழாக மாற்றியிருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் கிருமிகளால் தொழிலாளர்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் உயிரைப் பறிக்கும் கொரோனா, மறுபுறம் வாழ்வாதார இழப்பால் ஏற்பட்ட வறுமை என தொழிலாளர்களின் துயரம் பெருகிக் கொண்டே செல்கிறது.
இருளுக்குப் பிறகு ஒளி என்பது இயற்கை. பாட்டாளிகளைப் பொறுத்தவரை இருளுக்குப் பிறகு இரட்டை ஒளி என்பது புதிய இயற்கை. ஓராண்டுக்கும் மேலாக பாட்டாளிகளைப் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை பாதுகாப்பு விதிகள், தடுப்பூசி ஆகிய இரட்டை ஆயுதங்களைக் கொண்டு நாம் விரட்டியடிக்கப் போகிறோம். அடுத்ததாக பாட்டாளிகளின் நாளான மே ஒன்றாம் தேதிக்கு அடுத்த நாள் பாட்டாளிகளுக்கு பெருமகிழ்ச்சியும், அதிகாரமும் அளிக்கும் செய்தி வெளியாகவிருக்கிறது.
பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. உலகை இயங்க வைக்கும் பாட்டாளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சுழல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் உலகத்திற்கு உள்ளது. அதை மதித்து பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்கும் லட்சிய பயணத்தின் தொடக்கமாக நடப்பாண்டின் பாட்டாளிகள் நாள் அமையட்டும் என்று மீண்டும் ஒரு முறை உளமாற வாழ்த்துகிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் விடுக்கும் தொழிலாளர் நாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, " உலகத் தொழிலாளர்களின் உரிமை பிரகடன நாளான மே நாளைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள பாட்டாளிகளுக்கு எனது உளமார்ந்த தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட்டதா? என்றால் இல்லை என்பது தான் உண்மை. அதிலும் குறிப்பாக உலகம் முழுவதுமே புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்களுக்கு இருந்த அதிகாரங்களும், உரிமைகளும் பறிக்கப் பட்டு விட்டன. உரிமைகளைக் கோராத வரையில் தான் உழைப்பாளர்கள் பணியில் இருக்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் பணியை இழக்க வேண்டியது தான் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். உழைக்கும் வர்க்கத்திற்கு உயர்வு கிடைக்க வேண்டும்; உரிமைகள் கிடைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி போராட பாட்டாளிகள் நாளில் நாம் உறுதியேற்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Ramadoss and Anbumani Ramadoss Greetings about May 1 Labor Day 2021 Wish