அத்துமீறிய சிங்களக் கடற்படை.. துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்..! அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அத்துமீறிய சிங்களக் கடற்படையினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வங்கக்கடலில் கோடியக்கரைக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சிங்களப் படையினரின் இத்தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இலங்கைக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த  மீனவர்கள் கடந்த 28-ஆம் தேதி வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.  கோடியக்கரையிலிருந்து தென் கிழக்கில் 5 கடல் மைல் தொலைவில் நேற்றிரவு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சிங்களப் படையினரின் தாக்குதலில் இருந்த தப்ப தமிழக மீனவர்கள் படகுகளுக்குள் பதுங்கி கொண்டனர். கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகின் மீது சிங்களப் படையினர் நடத்திய தாக்குதலில், அதில் பதுங்கி இருந்த  கலைச்செல்வன் என்ற மீனவரின் தலையை உரசிக் கொண்டு துப்பாக்கி குண்டு சென்றது. இந்தத் தாக்குதலில் கலைச்செல்வன் படுகாயமடைந்து நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 7 முறை தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகைய தாக்குதல்களில் மீன்பிடி வலைகள் கிழிக்கப்பட்டதாலும், படகுகள் சேதப்படுத்தப்பட்டதாலும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மட்டும் பல லட்சம் இருக்கும். ஆனாலும் சிங்களப் படையினரின்  அத்துமீறல்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்காதது தான் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தும் துணிச்சலை சிங்களைப் படையினருக்கு அளித்துள்ளது.

இந்தியா & இலங்கை இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்குவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் குற்றம் ஆகும். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்கள் எவரையும் இந்தியக் கடலோரக் காவல்படை தாக்குவதில்லை. மாறாக, அவர்களை கைது செய்து, கண்ணியமாக நடத்துகிறது. மாறாக, தமிழக மீனவர்களை சிங்களப் படைகள்  தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்துவதும் இந்தியாவை சீண்டும் செயலாகும். இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்கியதற்காக இந்தியாவுக்கான இலங்கை தூதரை   இந்திய வெளியுறவுத்துறை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். கேரளத்தின் அரபிக்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றதற்காக இத்தாலிய கடற்படையினரை கைது செய்ததைப் போன்று, இந்த விஷயத்திலும் தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரை உடனே கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Condemn SriLanka Navy Shot Tamilnadu Fisherman he Injury Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->