சத்தியமங்கலம் அதிரடிப்படை போலீசார் குவிப்பு! காலையிலே பரபரப்பான சென்னை!
PM Modi participate two events in chennai IIT
சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது பட்டமளிப்பு விழா மற்றும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் நரேந்திரமோடி செல்கிறார். காலை 9.15 மணிக்கு ஐஐடி வளாகம் செல்லும் மோடி, ஐ.ஐ.டி. சென்னை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் காலை 9.30 மணிக்கு கலந்து கொண்டு ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். பரிசுகளை வழங்கும் பிரதமர் மோடி, புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை அவர் பார்வையிடுகிறார்.
காலை 11.40 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது, அங்கு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதியம் 12.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். பின்னர், அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதன்காரணமாக சென்னை ஐ.ஐ.டி. வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி.யில் பெரும்பாலான பகுதி வனப்பகுதி என்பதால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணியில் இருக்கும் அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
English Summary
PM Modi participate two events in chennai IIT