இரண்டாவது முறையாக நிரம்பிய அணை!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
pillur dam over flow
கோவை மாவட்டத்தில் நேற்று முன் தினம் முதல் தொடங்கிய மழை தற்போது வரை பரவலாக மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மலுமிச்சம்பட்டி, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் , துடியலூர் ஆகிய பகுதிகள் மற்றும் கோவை மாநகர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் மலை சார்ந்த பகுதிகள் இயற்கை எழிலோடு ரம்மியமாக காட்சி தருகின்றன. கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வர துவங்கியுள்ளது இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கனமழை எதிரொலியால் நீலகிரி மாவட்டம் பந்தலூர் , கூடலூர்,ஊட்டி மற்றும் குந்தா மூன்று தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல் நீலகிரி மாவட்டம் பந்தலூர் , கூடலூர் மற்றும் குந்தா ஆகிய மூன்று தாலுகாக்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக இரும்பு பாலம் என்ற இடத்தித்துள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மாயாற்றில் உபரிநீர் திறந்துவிடப்படுவதால், மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று இரண்டாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரத்து 660 கனடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்து 66.75 அடியை எட்டியுள்ளது.