பாலமேடு ஜல்லிக்கட்டில், துள்ளிக்குதித்த காளையை தட்டி அமுக்கிய பிரபாகரன்... காரை தட்டி சென்ற தங்க தமிழன்.!!
palamed pongal celebration jallikat
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கல் பண்டிகையின் போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது இயல்பான ஒன்றாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஜல்லிக்கட்டை தடை செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு இன்று மக்களுக்காக, தமிழர்களுக்காக ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. இதற்க்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வந்தது. நேற்று காலை சுமார் 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி, மாலை 4.30 மணிவரை போட்டிகள் நடைபெற்றது.
700 காளைகள் மற்றும் 730 வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிகட்டுப்போட்டி நடைபெறும் இடங்களில் அமரும் மாடம், அலங்கார வளைவு, ஒலிபெருக்கி, சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளது. நேற்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு காலை துவங்கியது. இந்த போட்டியில் சுமார் 700 காளைகளும், 923 வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 1500 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இறுதியாக காளைகள் அதிகளவு காத்திருந்தால் இறுதி நேரத்தில் ஒருமணிநேரம் அதிகரிக்கப்பட்டு விளையாட்டு தொடரப்பட்டது. இந்த போட்டியில் சுமார் 669 காளைகளும், 675 மாடுபிடி வீரர்களும் களத்தில் இருந்தனர். சுமார் 16 காளைகளை அடக்கிய பொதும்பு பகுதியை சார்ந்த பிரபாகரன் முதல் பரிசையும், 13 காளைகளை அடக்கிய அப்பாநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்த ராஜா இரண்டாம் பரிசையும், 10 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி பகுதியை சார்ந்த கார்த்திக் மூன்றாவது பரிசையும் பெற்றார்.
முதல் பரிசு பெற்ற பிரபாகரனுக்கு கார் பரிசாகவும் வழங்கப்பட்டது. இதனைப்போன்று சிறந்த காளையாக திண்டுக்கல் பகுதியை சார்ந்த ரமேஷின் காளைக்கு முதல் பரிசும், பரிசு பொருளாக ரூ.1 இலட்சம் மதிப்புள்ள காங்கேயம் பசுவும், கன்றுக்குட்டியும் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த காளையாக செம்பட்டி பகுதியை சார்ந்த செல்வம் என்பவரின் காளையும், இவருக்கு பரிசாக இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதனைப்போன்று மூன்றாவதாக பழங்காநத்தம் பகுதியை சார்ந்த கார்த்திக் கண்ணன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
palamed pongal celebration jallikat