அதிகளவு நீர்வரத்தால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
over water flood warning kollidam river side area
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவு தண்ணீர் திறப்பதால், பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து 86,540 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிற்கு வினாடிக்கு 13,160 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
இதனை போன்று காவிரியில் வினாடிக்கு 3,009 கனஅடி வீதமும், வெண்ணாறில் வினாடிக்கு 4,515 கனஅடி வீதமும், கல்லணை கால்வாய் ஆற்றில் வினாடிக்கு 1,011 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஆறுகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் கால்நடைகளை அழைத்துச் செல்லக்கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
over water flood warning kollidam river side area