திருவாரூர்: ஆன்லைன் வகுப்பில் ஆபாச புகைப்படம் அனுப்பிய ஆசாமி.! சுற்றிவளைத்து பிடித்த போலீசார்.!
online class wrong msg in thiruvarur
திருவாரூர் அருகே தனியார் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து ஆசிரியைகளுக்கும், மாணவிகளுக்கும் ஆபாச செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தற்போதுவரை பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆன்லைன் வகுப்பில் மாணவி ஒருவரின் பெயரில் வாலிபர் ஒருவரும் இணைந்து, வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கும், பாடம் பயிலும் மாணவிகளுக்கும் ஆபாச செய்திகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார்.
இதனையடுத்து, ஆன்லைன் வகுப்பில் இணைந்திருந்த அந்த மர்ம ஆசாமியின் செல்போன் எண்ணை பள்ளி நிர்வாகம் நீக்கியது. மேலும் இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் 29ம் தேதி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, சைபர் செல் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் இந்த விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி குப்பம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மோகன் குமார் தான் இந்த செயலை செய்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, பள்ளி வகுப்பில் ஆபாச செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பிய மோகன் குமாரை திருவாரூர் சைபர் செல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
online class wrong msg in thiruvarur