விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த அதிகாரிகள்..!
Officials trained the farmers
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவனம் சார்பில், நேற்று விவசாயிகளுக்கு 'மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள்' குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
இம்முகாமில் கலந்துக் கொண்ட முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன், விவசாயிகளுக்கு மலைப்பகுதிகளில் மண் அரிப்பை தடுக்கும் விவசாய முறைகள் குறித்து விளக்கம் அளித்த நிலையில், தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் காய்கறி சாகுபடி செய்ததால், மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 40 டன் மண் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு நிலவும் சூழலின் காரணமாக தான், மலைச்சரிவுகளில் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிடப்படுகிறது.
காலநிலை மாற்றத் தாக்கத்தின் காரணமாக ஒழுங்கற்ற மழைப்பொழிவு உள்ளதால், அபாயகரமான வகையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. நீலகிரியில் அதிக மழைப்பொழிவால் 68 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மண் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த மண் அரிப்பால் வளமான மண் இழப்பு மற்றும் மகசூல் குறைவும் ஏற்படுகிறது. இதனால் வடிகால் வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளில் வண்டல் மண் படிகிறது. நீர்நிலைகளின் கொள்ளளவு குறைவதோடு, வெள்ளம் ஏற்படுகிறது. இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுப்படி, படிமட்டங்கள் முறையில் பயிரிடப்பட்டு உருளைக்கிழங்கு விளைச்சலை அதிகரித்துள்ளது.
மேலும் 50 சதவீதம் நீரோட்டம் குறைந்தது மட்டுமல்லாமல், 98 சதவீதம் மண் இழப்பும் குறைந்துள்ளது. எனவே,விவசாயிகள் இடையே விவசாயத்தில் மண் அரிப்பு பிரச்சினை மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். என்று அவர் கூறினார். இம்முகாமில் 375 விவசாயிகளுக்கு 15 சுற்றுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
English Summary
Officials trained the farmers