தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம்?! அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி.!
no more 144 in tn
தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, தமிழக புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது,
"பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களை பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நலமுடன் உள்ளனர். மருத்துவர்கள் அவர்களை கண்காணித்து வருகின்றனர். அவர்களின் சளி மாதிரிகள் புனேவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா புதிய வகை வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்த விவரங்கள் மத்திய அரசுதான் வெளியிடும்.
மேலும், பிரிட்டனில் இருந்து வந்தவர்களின் பட்டியலை வைத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம் வருவதற்கு வாய்ப்பே இல்லை" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.