திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் புதுப்பெண் தற்கொலை.! போலீசார் விசாரணை.!
New married girl suicide in Cuddalore
கடலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகள் சந்தியாவிற்கும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று காலை பன்னீர்செல்வம் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, சந்தியா குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுள்ளார். பின்பு வெகு நேரமாகியும் சந்தியா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கணவர் கதவைத் தட்டி உள்ளார்.
ஆனால் சந்தியா கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். ஆனால் அங்கு சந்தியா மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விருதாச்சலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கணவர் பன்னீர் செல்வத்தை கைது செய்து, சந்தியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
New married girl suicide in Cuddalore