திருப்பூர் : சம்பளம் தர வில்லை என்றால் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவேன் - அரசு ஊழியர் பரபரப்பு பேச்சு.!
near tirupur govt employee said he will beg with his family
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிகரன். இவர் கடந்த 2010 ம் ஆண்டு காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக அரசு பணியில் சேர்ந்தார்.
பின்னர், 2019 ம் ஆண்டு பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவர் முன்பு பணிபுரிந்த பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருந்து முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இதுவரைக்கும் ஊதியச்சான்று கிடைக்காததால் தற்போது பணியாற்றும் இடத்திலிருந்து சம்பளம் வாங்க முடியாமல் திண்டாடி வருகிறார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:- கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தேன். பிறகு கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரின் ஜீப் ஓட்டுநராக இடமாற்றம் செய்யப்பட்டேன்.
பொதுவாக பணியில் சேரும்போது முன் ஊதியச் சான்று வழங்க வேண்டும். அதனால், நான் முன்பு பணியாற்றிய பல்லடம் தாலுகா அலுவலகத்தில் முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.
ஆனால் 83 நாட்களாகியும், எனக்கு இன்னும் முன் ஊதியச் சான்று கிடைக்கவில்லை. மேலும் அக்டோபர் 1-ல் இருந்து 17ந் தேதி வரை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றியதற்கான சம்பளமும் வழங்கவில்லை.
இதுவரைக்கும் முன் ஊதியச் சான்று தரப்படாததால் தற்போது பணியில் சேர்ந்த இடத்திலும் சம்பளம் வழங்கவில்லை. இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினேன்.
இதனால், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி சமாளித்து வந்தேன். தற்போது பேருந்துக்கு கூட பணம் இல்லாததால் மிதிவண்டியிலேயே தினமும் காங்கேயம் பாளையத்திலிருந்து திருப்பூருக்கு வந்து செல்கிறேன்.
சுமார் 70 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே பயணம் செய்வதால் கடும் உடல் வலி ஏற்படுகிறது. ஆகவே, எனக்கு உடனடியாக பாக்கி சம்பளமும், முன் ஊதியச் சான்றும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த உள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
near tirupur govt employee said he will beg with his family