போலி அதிகாரிகள், அரசு முத்திரை... பிளான் போட்டு அரசு ஊழியரை ஏமாற்றிய கும்பல்.. மக்களே உஷார்.!
Nagapattinam Govt Employee Cheated by Fraud Gang Police Investigation 2 March 2021
குடும்ப நண்பர் போல பழகி அரசு பேருந்து நடத்துநரிடம் 45 இலட்சம் மற்றும் 45 சவரன் நகைகளை திருடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைசேரி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு நடத்துனர் சுப்பிரமணியன். இவர் அதே பகுதியில் விநாயகர் கோயிலை கட்டி பராமரித்து வரும் நிலையில், கோவிலுக்கு அடிக்கடி வந்து சென்ற ராமகிருஷ்ணன் என்பவர் சுப்பிரமணியன் குடும்பத்தினருடன் குடும்ப நண்பர் போல பழகி உள்ளார்.
இந்த நிலையில், தனது மகள் ராஜேஸ்வரி ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருப்பதாக கூறி சுப்பிரமணியத்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் நெருங்கிய உறவுகளைப் போல ராமகிருஷ்ணனின் குடும்பத்தார் தங்களது துக்கம், சந்தோஷம் என எல்லாவற்றையும் சுப்பிரமணியன் குடும்பத்திடம் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தான் ஓய்வு பெற்றபோது பெற்ற செட்டில்மெண்ட் பல இலட்சம் இருப்பதாகவும், இதுமட்டுமல்லாது பரம்பரை நகைகள் இருப்பதாகவும் சுப்பிரமணியன் கூறவே, இதனை அபகரிக்க முயற்சி செய்த கும்பல் தங்களுடைய பூர்வீக சொத்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வருமான வரித்துறை வசம் இருப்பதாகவும், அதனை மீட்க ரூ.45 இலட்சம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
அதனை நம்பிய சுப்பிரமணியம், தனது நண்பர்கள் மூலமாக உதவி செய்ய முடிவு செய்துள்ளார். மேலும், இதற்காக முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் போல படித்தவர்களும் சுப்பிரமணியத்திடம் வந்து பேசியுள்ளனர். போலி அதிகாரிகளின் பேச்சில் மயங்கிய சுப்பிரமணியம், தன்னிடமிருந்த பணத்தோடு ஏராளமானோரிடம் கடன் வாங்கியும் கொடுத்துள்ளார்.
இவ்வாறாக ரூ.45 இலட்சம் பணம் மற்றும் 45 சவரன் நகையை பெற்றுக்கொண்ட ராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி கும்பல் அதன் பின்னர் குடும்பத்தோடு தலைமறைவாகவே, இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராமகிருஷ்ணன், ராஜேஷ்வரி, வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்த ஆசாமிகள் உட்பட 8 பேரை தேடி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் அரசு முத்திரை, போலி அரசு ஆவணங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், இந்த கும்பலுக்கு பெரிய அளவில் குற்றப் பின்னணி இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nagapattinam Govt Employee Cheated by Fraud Gang Police Investigation 2 March 2021