சாலையில் செல்லும் போதே பறிக்கப்பட்ட செல்போன்கள்! பதறவைக்கும் வீடியோ!
mobile theft in mayiladuthurai
மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து செல்போனை பறித்து திருடிச்செல்லும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் நடந்து செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன்களை பறித்து திருடிச் செல்வது அதிகரித்து வந்தது. ரோட்டில் செல்போனில் பேசிகொண்டு நடந்து செல்பவர்கள், நின்றுகொண்டு செல்பொனில் பேசிக்கொண்டிருப்பவர்களிடம்; இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து செல்போன்களை பறித்து மர்ம நபர்கள் திருடிச்செல்வதாக மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. சபீர்அஹமது, சதிஸ்குமார், வெங்கடசுப்ரமணியன் உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர்.
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை நகரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேல் தலைமையில் போலீசார் சேந்தங்குடி பகுதியில் வாகன சோதனையில ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் மணக்குடியை சேர்ந்த ராம்குமார்(22), வசந்த்(19), கார்த்தி(21), விவேக்(22); என்பதும் செல்பொன்களை திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் செல்பொன்களை திருடும் அகரமணக்குடியை சேர்ந்த கீர்த்திவாசன்(20) கீழிருப்பை சேர்ந்த கார்த்தி(19) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இரவில் மட்டுமே செல்பொன் திருட்டில் ஈடுபட்டதாகவும், குடிப்பதற்காக செல்போன்களை திருடியதாக கூறினர். அவர்களிடமிருந்து ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
செய்தியாளர் : மணி
English Summary
mobile theft in mayiladuthurai