மாநில அரசை கையேந்த வைத்து வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - அமைச்சர் குற்றச்சாட்டு.!
Minister Anitha Radhakrishnan Pressmeet at Kanyakumari Sinnamuttam
மத்திய அரசிடம் பல துறைகள் இருக்கும் நிலையில், மாநில அரசுகளை கையேந்தி நிற்கவைத்து வேடிக்கை பார்க்கிறது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு அமைச்சரை காண நேரில் வந்திருந்த மீனவ மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, தமிழக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், " சின்னமுட்டம் மீன்படி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் பணிகள் தொடங்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் இருந்து மீனவர்களை அவசர காலங்களில் மீட்க ஹெலிகாப்டர் தளம் ஏற்படுத்தப்படும்.
மீனவர்களின் நிம்மதியை அழிக்கும் வகையில் மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு மாநில அரசின் உரிமை, மீனவர்களின் உரிமையில் தலையிடாதவாறு திட்டங்கள் கொண்டு வர தமிழக அரசு உறுதியாகியுள்ளது. எந்த திட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டாலும், மீனவர்களின் உரிமையை காக்க அவர்களுடன் தமிழக அரசு துணைநிற்கும்.
உணவு, மின்சாரம், கல்வி, ஜி.எஸ்.டி போன்று பல துறைகளை மத்திய அரசு கைவசம் வைத்துள்ள நிலையில், மாநில அரசை கையேந்தி நிற்க வைக்க வேண்டும் என்ற ஒரே அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் பேரிடர் காலத்தில் விரைந்து கரைதிரும்ப தகவல் தெரிவிக்கும் வகையில், தொலைத்தொடர்புக்கு அதிநவீன கருவிகள் வழங்கப்படும் " என்று தெரிவித்தார்.
English Summary
Minister Anitha Radhakrishnan Pressmeet at Kanyakumari Sinnamuttam