குடிநீர் டேங்க்கில் ஏறி தற்கொலை? ஒன்றரை மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்.!
mechanic try to suicide in water tank
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேந்தவர் கணேசன்(வயது 46). ஏ.சி. மெக்கானிக்காக இருந்து வரும் இவருக்கு மனைவி, இரு பெண் குழந்தைகள். தற்போது சென்னையில் உள்ளனர். இவருக்கு சொந்தமான 50 சென்ட் இடம் சேவியர் காலனியில் இருந்தது.
கணேசனுக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி குடிநீர் டேங்க் கட்ட எடுத்துக் கொண்டதாக கூறி வந்தார். இது தொடர்பாக அவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் தீர்ப்பு வந்த பிறகும் அவரது இடத்தை திரும்பத் தர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தனது இடத்தை தரக் கேட்டு கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
போராட்டங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், சுதந்திர தினமான நேற்று காலை 6.30 மணிக்கு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிய கணேசன், எனது நிலத்துக்கு தீர்வு இல்லாததால் தற்கொலை செய்யப் போவதாகக் கூறினார்.
இதுகுறித்து, அங்கிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசார், டேங்கின் மீது ஏறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் திடீரென டேங்கிலிருந்து கீழே குதிக்க முயற்சித்தார். கையில் ஒரு சிறிய பாட்டிலில் பெட்ரோலும் நிரப்பி வைத்திருந்தார்.
அப்போது லாவகமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் கணேசனை மடக்கிப் பிடித்தனர். வீரர்கள் மடக்கிப் பிடித்ததில் பெட்ரோல் கீழே சிதறி கொட்டியது. தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதிக்க முயன்ற கணேசனை தீயணைப்பு அலுவலர்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் ஒன்றரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
mechanic try to suicide in water tank