உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த நபர்..! காரணம் என்ன?.
man sucide in chennai highcourt
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றம், வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவுவாயில் முன்பு வந்த அவர், திடீரென்று தனது தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். சரசரவென்று அவரது உடல் தீப்பிடித்து எரிந்தது. உடல் எரிந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உள்ளே நடந்து சென்றார்.
மேலும் தனது உடலில் பெட்ரோல் ஊற்றியபடி சென்றதால், தீ அதிவேகமாக பரவியது. இதனால் அங்கிருந்த போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை. இதையடுத்து அவர் அங்குள்ள இலவச சட்ட ஆலோசனை மையம் அருகில் வந்தவுடன் தீயணைக்கும் எந்திரம் மூலம், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் வக்கீல்களும், வழக்கு விசாரணைக்கு வந்த பொதுமக்களும் அங்கு கூட்டமாக திரண்டனர். அந்த பதற்றமான சூழ்நிலையிலும், தீக்குளித்த நபர், அங்கு கூடிநின்றவர்கள் மத்தியில் சத்தம் போட்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
"நான் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவன். எனது மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து பார்த்தேன். ஆனால் சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. அந்த வருத்தத்தில் இந்த முடிவை எடுத்தேன். எனது இந்த முடிவின் மூலம், இனிமேல் பொதுமக்களுக்கு உடனுக்குடன் சாதிச்சான்றிதழ் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றுஅவர் சத்தம் போட்டு பேசினார்.
இதையடுத்து அங்கிருந்த வக்கீல்கள் ஆம்புலன்ஸ் வேனை வரவழைத்தனர். அவரை காப்பாற்ற முயன்ற துணை தலைமை காவலர் தினகரன் என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீக்காயங்களுடன், ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி செல்லப்பட்ட அந்த நபர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மேலும் சைதாப்பேட்டை பெண் மாஜிஸ்திரேட்டு அனிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று வேல்முருகனிடம் வாக்குமூலம் பெற்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். தீக்குளித்தநபருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர்.
English Summary
man sucide in chennai highcourt