தமிழகத்தை சார்ந்த பாதுகாப்பு படை வீரர், நக்சல்கள் தாக்குதலில் வீரமரணம்.!
Madurai Poigaikaraipatti BSF Officer BaluSamy Died Naxalite Landmine Attack
பொய்கைக்கரைபட்டி பகுதியை சேர்ந்த பாலுச்சாமி என்ற பாதுகாப்பு படை வீரர் (BSF) நக்சல்களுக்கு எதிரான தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள பொய்கைக்கரைபட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூன்றாவது மகன் பாலுச்சாமி (வயது 31). இவர் கடந்த 14 வருடமாக இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்துள்ளார்.
இதுமட்டுமல்லாது பஞ்சாப், அசாம், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பணியாற்றி வந்துள்ளார். பாலுச்சாமிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது.
விடுமுறையில் கடந்த ஒரு மாதமாக சொந்த ஊரில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பணிக்கு திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் இரவு வரையிலும் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், இன்று காலை இந்திய - திபெத் எல்லைப் பகுதியில் நக்சல்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது நக்சல்கள் இந்திய வீரர்கள் பாதையில் கண்ணிவெடிகளை வைத்த நிலையில், எதிர்பாராத விதமாக கண்ணி வெடியில் சிக்கிய பாலுச்சாமி வீரமரணம் அடைந்துள்ளார். பிற வீரர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
பாலுச்சாமியுடன் பணியாற்றி வந்த சக வீரர்கள், இந்த தகவலை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகிய நிலையில், உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் பாலுசாமியின் உடல் பெங்களூருக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
அங்கிருந்து இன்று இரவு தரைவழியாக அவரது சொந்த ஊரான பொய்கைக்கரைப்பட்டிக்கு எடுத்து செல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் நாட்டிற்காக தன்னுயிர் நீத்த பாலுச்சாமியின் மறைவு காரணமாக பொய்கைக்கரைப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Poigaikaraipatti BSF Officer BaluSamy Died Naxalite Landmine Attack