கோலமாவு கல் எடுக்க சென்ற பெண்கள்... மண் சரிந்து பரிதாப பலி..!
Landslide kills women
கோலமாவுக்கு கல் எடுக்க சென்ற போது மண் சரிந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாம நத்தம் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண்வெட்டி எடுத்துள்ளனர். இதனால், 10 அடிக்கு கீழ் வெள்ளை நிற கற்கள் காணப்படுகின்றன. இவற்றை எடுத்து கோல பொடியாக பயன்படுத்த நினைத்த அந்த பகுதியை சேர்ந்த ராதா, லட்சுமி, உமி, விமலம்மா ஆகியோர் அங்கு சென்றனர்.
அப்போது கோலமாவு கல் சேகரித்த போது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மண் சரிந்து விழுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ராதா மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.