தமிழகத்தில் எதிர் காலங்களில் நிலத்தடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
land water decrease in tamilnadu
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் நிலத்தடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதை இந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. சென்னை தவிர தமிழகத்தின் மற்ற 31 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் குறித்து மாநில நிலத்தடி மற்றும் நீர் ஆதாரத் துறை மூலம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் கடந்த மாதம் ஆகஸ்டு வரை, நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் எதிர்வரும் காலத்தில் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாகை, திருப்பூர், ராமநாதபுரம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே கடந்த ஓராண்டில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதுவும் நாகையில் 0.32 மீட்டர், திருப்பூரில் 0.26 மீட்டர், ராமநாதபுரத்தில் 0.04 மீட்டர், தேனியில் 0.04 மீட்டர் என்ற மிகக் குறைந்த அளவிலேயே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்திருப்பதை எண்ணி திருப்தி அடைந்தாலும், இந்த அளவிலான உயர்வு மகிழ்ச்சிகரமானது அல்ல. ஏனெனில், இந்த 4 மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தாலும் கூட அடுத்து வரும் நாட்களில் நிலத்தடி நீர் குறையக்கூடும் என்பதை அறிவிக்கும் அளவுகளில் தான் நீர்மட்டம் உயர்த்திருக்கிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவினால் அதிகபட்சம் பாதிக்கப்பட்டது பெரம்பலூர் மாவட்டம் தான். கடந்த 2018 ஆம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 11.07 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம், தற்போது 3.58 மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்ட அளவு 2.84 மீட்டர் அளவுக்கு கீழிறங்கி 7.31 மீட்டராக உள்ளது.
English Summary
land water decrease in tamilnadu