வெள்ளை மயிலின் அழகிய காட்சி... இயற்கை எழில் சூழ்ந்த இடம்.!
kurumpapatti forest zoo
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா சேலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஏற்காடு மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
சிறப்புகள் :
இந்த பூங்காவானது 1981ஆம் ஆண்டு 11 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்போது 71 புள்ளி 37 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பூங்கா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் சிறுத்தை, புலி, நரிகள் போன்ற விலங்குகள் இருந்தன.
மத்திய மிருககாட்சி சாலை ஆணையத்தின் உத்தரவுப்படி சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் வண்டலூர் மிருககாட்சி சாலைக்கு இங்கு இருந்து மாற்றப்பட்டன.
இந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை மயில்கள் தோகை விரித்து நடனமாடி மகிழும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடனும், வியப்புடனும் பார்த்து செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி, துள்ளித் திரியும் புள்ளிமான்கள், யானை, பாம்புகள், குரங்குகள், மயில்கள், வண்ண நாரைகள், சதுப்பு நில முதலை, கிளிகள், நீர் ஆமைகள், கடல் மான், குள்ளநரி, வங்காநரி, நீர்பறவைகள் எனப் பல உயிரினங்கள் இந்த உயிரியல் பூங்காவில் உள்ளன.
இதனை உள்ளர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தங்களின் குடும்பங்களுடன் வந்து பார்த்து ரசித்து மகிழ்கின்றனர்.
இவ்வளாகத்தில், குழந்தைகள் பூங்கா ஒன்றும் உள்ளது. இவ்விடம், இயற்கையான சூழலில் பொழுதைக் கழிப்பதற்கு இனிய இடமாகும்.
இந்த பூங்காவில் முதியவர்கள் சுற்றிப் பார்ப்பதற்காக பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது விடுமுறை நாட்கள் என்பதால், அனைத்து தரப்பு மக்களும் தங்களின் குடும்பங்களுடன் சென்று கோடை விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.