குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி! கூட்டத்திற்கு பின்பு, கேபி முனுசாமி பாஜகவிற்கு பதிலடி!
KPM Press meet after party cadres discuss
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என கடந்த ஒரு வாரமாக சர்ச்சை எழுந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் எம்எல்ஏக்கள் கூடி முதலமைச்சரை முடிவு செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தான் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலின் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட் செய்திருந்தார். இது அதிமுகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வந்தனர்.
இதையடுத்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூடி பேசி அறிவிப்பர் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அதிமுக தலைமையின் கீழ் தான் பாஜக மக்களவை தேர்தலை சந்தித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது எனவும் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையின் கீழ் கூட்டணி என்ற பாஜகவின் பேச்சுக்கு இது பதிலடியாக பார்க்கப்படுகிறது.
English Summary
KPM Press meet after party cadres discuss