எல்லைதாண்டி வந்து வழிப்பறி, கொள்ளை... ஆட்டோ கொள்ளையர்களை அலேக்காக தூக்கிய காவல்துறை.!
Kerala Robbers Arrest by Kanyakumari Police Using Auto to Robbery
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை தோலடி என்ற இடத்தில், பகவதி அம்மா என்ற 70 வயது பெண்மணி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று, ஆட்டோவில் பகவதி அம்மாவின் வீட்டிற்கு வந்த 3 பேர், மூதாட்டியிடம் படுக்கைக்கு மெத்தை வேண்டுமா? என்று கேட்டுள்ளனர்.
இதனைக்கேட்ட பகவதி அம்மா மெத்தை வேண்டாம் என்று பதில் கூறவே, அவர்கள் மூவரும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் கொண்டுவர வீட்டிற்குள் சென்றபோது, ஆட்டோவில் இருந்த ஒருவன் பகவதி அம்மாவின் பின்னாலேயே சென்று அவரது கழுத்தில் இருந்து ஒன்றரை பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளான்.
இதன் பின்னர் மூவரும் ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், பகவதி அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தும் பலனில்லாமல் போயுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள தேவிகாடு பகுதியைச் சார்ந்த வசந்தகுமாரி என்பவர் தனியாக நடந்து செல்கையில், அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை 3 பேர் பறித்து விட்டு சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில், இரண்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் ஒரே ஆட்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சோதனை செய்கையில், கேரள மாநிலத்தை சார்ந்த ஆட்டோ சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றியது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டோ குறித்த விசாரணையில், அது கேரள மாநிலத்தில் உள்ள குந்துகால் பகுதியை சார்ந்த அனில்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
அனில்குமாரை காவல் துறையினர் ஒருபுறம் தேடிவந்த நிலையில், பிற காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளுக்கு ஆட்டோ தொடர்பான தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அருமனை பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், ஆட்டோவில் அடுத்த கொள்ளையை அரங்கேற்ற வந்த 2 கொள்ளையர்களும் சிக்கியுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கேரள மாநிலம் பிலாமூடு பகுதியை சேர்ந்த முகமது ஷாபி, அனில் குமார் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனுக்கும் வலை வீசப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kerala Robbers Arrest by Kanyakumari Police Using Auto to Robbery