கலவரத்தை கண்முன் நிறுத்திய திமுக கூட்டணி... வஜ்ரா வாகனமும் விரைந்தது : ஜோதிமணி-செந்தில்பாலாஜியால் நிலவிய உச்சகட்ட பதற்றம்.!
karur-election-office-jothimani-senthilbalaji-protest
கரூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நாளை 16-ந்தேதி நிறைவு பெறுகிறது. அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கரூர் பஸ் நிலையம் மனோகரா கார்னர் பகுதியில் இறுதிக்கட்ட பிர சாரம் செய்ய அனுமதி கேட்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் தரப்பில் அ.தி.மு.க.வினர் முன்னதாகவே விண்ணப்பித்துள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி, விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்த உதவி தேர்தல் அதிகாரி சரவண மூர்த்தியிடம் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அதிகாரிகளுக்கும், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே அங்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தை அடக்க பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அலுவலக வாயிற் கதவுகள் பூட்டப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நாளை மாலை 4-6 மணியளவில் மனோகரா கார்னர் அருகே காங்கிரஸ் வேட்பாளருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு முன்னதாக அதே இடத்தில் மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 6 மணி நேரமாக நடந்த உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு, அதிகாரிகளிடம் இருந்து அதற்குரிய ஆணையை பெற்று கொண்டு ஜோதிமணி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்தனர்.
English Summary
karur-election-office-jothimani-senthilbalaji-protest