மாயவரத்தில் களைகட்டிய முடவன் முழுக்கு!
karthigai 1 mudavan muzhukku
மயிலாடுதுறை 17.11.19 : மயிலாடுதுறையில் நடைபெற்ற ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு இறைவன் காட்சி தந்த, நாளான முடவன் முழுக்கை முன்னிட்டு, காவிரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை தரிசித்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம், காவிரியில் நீராடி, இறைவனை வழிபட்டு, தங்கள் பாவத்தை போக்கியதாக புராணம். அதன்படி, காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, உடல்ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதம் முடிவதற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. அந்த பக்தருக்காக மனம் இரங்கிய இறைவன், முடவனுக்கு ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை அளித்தார்.
அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் நாள், முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, சந்திரசேகர சுவாமி, மனோன்மணி அம்மையுடன் காவிரிக்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்கு காவிரியில் அஸ்திர தேவருக்கு, பால், பன்னீர், சந்தனம், திரவியப்பொடி கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.
செய்தியாளர் மணி
English Summary
karthigai 1 mudavan muzhukku