செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் மட்டும் இல்ல... இதுக்கும் தான்...!!
kanadukathan maharaja palace
சிவகங்கையிலிருந்து ஏறத்தாழ 62கி.மீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து ஏறத்தாழ 12கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய கட்டிடக்கலையுடன் கூடிய இடம்தான் கானாடுகாத்தான்.
கானாடுகாத்தான் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகில், அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும்.
தமிழ்நாட்டின் கட்டிடக்கலையில் பலவகை இருந்தாலும் செட்டிநாடு வீடுகளின் கட்டிடக்கலை உலகப் புகழ்பெற்றவை.
பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இவ்விடத்தை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இவ்விடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இவ்வூரின் வீடுகள் கட்டப்பட்டுள்ள விதம் மற்றும் இங்கு கிடைக்கும் உணவு வகைகள் இவ்வூரின் தனிச்சிறப்புகளாகும்.
பிரதானக் கதவுகள் மற்றும் நுழைவு வாயில்கள், கம்பீரமாகவும், சிறப்பான வேலைப்பாடுகளுடன், இந்துக் கோவில்களின் நுழைவு வாயில்களை ஞாபகப்படுத்தும்படி அமைந்துள்ளன.
கானாடுகாத்தானிலுள்ள வீடுகள் மிகப் பெரியவையாகவும், செட்டிநாடு பாணியில் கட்டப்பட்டவையாகவும் விளங்குகின்றன.
மழை நீர் சேகரிப்புக்காக, வலை மூடியைக் கொண்டு மூடப்பட்ட குழிகள், கானாடுகாத்தான் தெருக்களில் அதிகமாகக் காணப்படும் ஒரு பொதுவான அம்சமாகும்.
இந்த அரண்மணை வீடுகளில் குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும். வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலமான திண்ணை, கம்பீரமான மரத் தூண்கள் பண்பாட்டு அடையாளமாகவே காணப்படுகிறது.
பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு மரப் பலகையில் செய்யப்பட்ட கதவுகளும், ஜன்னல்களும் இன்றும் கலையம்சத்தை உணர்த்துகின்றன.
இனி எத்தனை யுகங்கள் கடந்தாலும், எத்தனை கோடிகளை வாரி இறைத்தாலும் இதைப் போன்ற கட்டிடக்கலை வாய்க்கப் பெறாது என்பது மறுக்க முடியாத உண்மை.
English Summary
kanadukathan maharaja palace