டாக்டர் ராமதாஸ் பரிந்துரை செய்தவர்களுக்கு, சுதந்திர தின விழாவில் விருது! தமிழக அரசு அறிவிப்பு!
kalpana chawla award goes to perambalur ladies
அணை கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோடு, இருவரை மீட்ட வீரப்பெண்களுக்கு விருது வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வலியுறுத்தியிருந்தார். அவர்களுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது இன்று வழங்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை பகுதியில் மருதையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் அதிக ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த பள்ளத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அப்பகுதி மக்கள் அந்த பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் தான் குளிப்பது வழக்கம்.
மருதையாற்றுக்கு அருகில் உள்ள திடலில் மட்டைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதால், அதில் பங்கேற்பதற்காகவும், போட்டிகளைக் காண்பதற்காகவும் வந்த இளைஞர்கள் சிலர் அந்த பள்ளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அது ஆபத்தான பகுதி என்பதால் அதில் குளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல் 4 இளைஞர்கள் அந்த நீரில் குளித்துள்ளனர். நீச்சல் தெரியாத அவர்கள் ஆழத்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர்.
அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்கள் தங்களின் சேலையை கயிறாக மாற்றி அந்த இளைஞர்கள் நோக்கி வீசியுள்ளனர். ஆழத்திலிருந்து மீண்ட கார்த்திக், செந்தில் வேலன் ஆகிய இரு இளைஞர்களை அவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். ஆனாலும், மருத்துவர் ரஞ்சித் (வயது 25), மாணவர் பவித்ரன் (வயது 17) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர்.
நீரில் மூழ்கியவர்களில் இருவரை தங்களின் உயிரையும், மானத்தையும் பொருட்படுத்தாமல் போராடி காப்பாற்றிய செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூவருக்கும் வீரதீர செயல்களுக்கான விருது ஆன கல்பனா சாவ்லா விருதினை தமிழக அரசு இன்று வழங்கி கௌரவப்படுத்துகிறது.
English Summary
kalpana chawla award goes to perambalur ladies