எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே தவறு தான் செய்கிறார்கள்.! நீதிபதிகள் கடும் அதிருப்தி.!
judges says illegal actions repeated
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). இவர் நேற்று பல்லாவரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மாதிரியான சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளபோதிலும், நிலைமை அப்படியே தான் இருக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பது தொடர்கிறது.
இந்நிலையில், பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசசாயி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-
"பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்கிறது.
விதிகளை மீறி பேனர்கள் வைப்பது, அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது அரசியலாக்கப்படுகின்றன. உயிரிழப்புக்கு 2 லட்சம் ரூபாய் கருணைத்தொகை தந்தால் பிரச்சினை முடிந்துவிடும் என நினைக்கிறார்கள்", என்று தெரிவித்திருந்தார்.
இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமாக இருந்த பேனரை அச்சடித்த அச்சகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
judges says illegal actions repeated