விருதுநகரில் அதிகரித்து வரும் இறப்புகள்..மரண பீதியில் ஊர்மக்கள்.!!
increasing death in viruthunagar by snake biting
தமிழக்தில் விருதுநகர் மாவட்டதில் உள்ள திருச்சுழி, காரியாப்பட்டி சுற்றுவட்டாரங்களில் பாம்பு கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து வருவதால் பீதியில் உள்ள அந்த பகுதி மக்கள், சீமைக் கருவேல் மரங்களை அகற்ற கோரிக்கை வைத்துள்ளார்கள். அதேசமயம், பாம்புக்கடியிலிருந்தும் கடிபட்டால் தப்பிக்கும் வழி குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் விவரிக்கிறது.
திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களில் பாம்பு கடித்து சுமார் 25 க்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை, மதுரை, மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவற்றுள் சிகிச்சை பலனின்றி 8 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக இறந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது இந்தக் கிராமங்களிலுள்ள வீடுகளைச் சுற்றிலும் அடர்ந்து காணப்படும் கருவேல மரங்கள். தற்போதுள்ள சூழலின் தீவிரத்தை உணர்ந்து இவற்றை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
குளிர் ரத்தப் பிராணிகளான பாம்புகள், தாங்கள் வசிப்பதற்கு தனியாக குழிகள் தோண்டுவது இல்லை. பதிலாக எலிப் பொந்துகளுக்குள் சென்று தஞ்சமடைந்துவிடும். மழைக்காலங்களில் அந்தப் பொந்துகள் தண்ணீரால் நிரம்பிவிடுவதால் பாதுகாப்பான இடம் தேடி குடியிருப்புகளைச் சுற்றியுள்ள புதர்கள், பொந்துகளில் தஞ்சம் புக முயற்சி செய்யும்.
முக்கியமாக வீட்டைச் சுற்றிலும் அல்லது வீட்டுக்குள் இருக்கும் அடைசலான, பெரிய அளவில் புழக்கம் இல்லாத பகுதிகளில் சென்று ஒளிந்துகொள்ள பார்க்கும். அப்போது அங்கு வரும் மனிதர்கள் அறியாமல் அவற்றை மிதிக்க நேர்ந்தாலோ, தொட நேர்ந்தாலோ தற்காப்புக்காக அவை அவர்களை கடித்துவிடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாம்பு கடித்தவுடன் பதற்றமடைவதே விஷம் உடலுக்குள் வேகமாகப் பரவக் காரணம் என்று கூறும் நிபுணர்கள், எவ்வித பதற்றமும் அடையாமல், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை நாட வேண்டும் என்கின்றனர். மேலும் முதலுதவி என்ற பெயரில் முறையான பயிற்சி இல்லாமல் பச்சையிலை கட்டுவது, சிறுநீர் குடிப்பது உள்ளிட்ட செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
வீட்டைச்சுற்றி தேவையற்ற பொருட்களை போட்டுவைக்காமல் சுத்தமாக வைத்துகொள்வதோடு, முட்புதர்களை வளரவிடாமல் அவ்வப்போது வெட்டி சீர் செய்து வந்தால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
English Summary
increasing death in viruthunagar by snake biting