மயிலாடுதுறையில் மக்களுக்கான போராட்டத்தில் இளைஞர்கள்.. நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்?.!
in mayiladurai police arrest youngsters against township commit
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தன்னார்வ இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கியதிலிருந்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துவரும் நிலையில், கடந்த ஓராண்டாக பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக இதுவரை சாலைகளில் 14 முறை பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மேலும் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் சூழ்ந்து நின்று பொது சுகாதாரத்திற்கு சவாலாக விளங்குகிறது. இதையடுத்து பாதாளசாக்கடை பிரச்சனைகளை களையக் கோரி மயிலாடுதுறையில் தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் தன்னார்வ இளைஞர்கள் 50 பேர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு பாதாள சாக்கடை பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்ய வலியுறுத்தியும் சேதமடைந்த சாலைகளை தரமான முறையில் அமைத்துதர வலியுறுத்தியும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர்.
English Summary
in mayiladurai police arrest youngsters against township commit