2வது மனைவியுடன் தகராறு: திருமணமான ஒரே மாதத்தில் கணவர் தற்கொலை.!
Husband committed suicide in kovai
கோவை மாவட்டத்தில் திருமணமான ஒரே மாதத்தில் குடிபோதையில் இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிரபாகரன் (30).இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இதையடுத்து கடந்த மாதம் கரூர் பகுதியை சேர்ந்த கோமதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தனது பெற்றோர் வீட்டிற்கு போகலாம் என்று கோமதி கூறியுள்ளார்.
ஆனால் பிரபாகரன் அப்பொழுது மது குடித்துவிட்டு வந்ததால் மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு கோமதி வெளியே சென்றுள்ளார். இதையடுத்து கோமதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கோமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரபாகரன் சேலையில் தூக்கில் தொங்கியுள்ளார். இதையடுத்து பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband committed suicide in kovai