போலீசாருக்கு விடுமுறை அமல்படுத்திய போலீஸ் சூப்பிரண்டு!! குவிந்துவரும் பாராட்டுகள்!!
holiday for women police
ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் எஸ்.சக்தி கணேசன். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்ற பிறகு, அப்பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களால் பாராட்டப்பெற்று வருகிறார். பொதுமக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்திய இவர் தற்போது போலீசார்களுக்கும் நல்ல திட்டங்களை கொண்டுவருவதால் சக போலீசார்களாலும் பாராட்டப்பெற்று வருகிறார்.
சக்தி கணேசன் மூத்த குடிமக்களின் புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க ‘ஹலோ சீனியர்ஸ்’ என்ற திட்டத்தை தொடங்கினார். அதற்கு அடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவர்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க ‘லேடீஸ் பர்ஸ்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டங்களுக்காக அவர் அறிவித்து இருக்கும் தொலைபேசி எண்களுக்கு யாராவது புகார் தெரிவித்தால் உடனடியாக அந்த சம்பந்தப்பட்டவரை அந்தந்த பகுதி போலீசார் சந்தித்து விவரத்தை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். இந்த திட்டங்கள் பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் பெண் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அமல் படுத்தி உள்ளார் சக்தி கணேசன். கடந்த 26 ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்து உள்ளது. இதன் மூலம் 300 பெண் போலீசார் பயன் பெறுகிறார்கள். ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை 300 பேருக்கும் சுழற்சி அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் போலீசாரும் முறையாக விடுமுறை எடுக்கிறார்களா? என்பதை கண்காணிக்கவும் ஒரு அதிகாரியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியமித்து உள்ளார். இதனால் போலீஸ் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பெண் போலீசாரை கட்டாயப்படுத்தி விடுமுறையை ரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் பெண் போலீசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.