கள்ளக்குறிச்சி பகுதியில் கொட்டி தீர்த்த மழை.! வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்.!
heavy rain kallakurichi
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் சுமார் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. நேற்றும் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழையின் காரணமாக தியாகதுருகம் அருகே, மகாரூர் என்ற கிராமத்தில் 100 வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. போதுமான வடிகால் வசதி இல்லாததன் காரணமாக தண்ணீர் அப்படியே தேங்கி இருக்கின்றது.
இது குறித்து, அந்த பகுதி மக்கள், "மழை நீர் வெளியேறுவதற்கு கால்வாய் வசதி கேட்டு அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேங்கிய தண்ணீர் மூலம் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா நோய்கள் உருவாக வாய்ப்பு இருக்கின்றது." என தெரிவித்தனர்.
கல்வராயன் மலைப் பகுதியிலும் இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக மலைப் பகுதியில் இருக்கும் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கனமழையால் கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது.
அணையின் மொத்த கொள்ளளவு 48 அடி தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 32 அடியாக இருக்கின்றது. தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.