திருமயம் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர்..!
H Raja gives Appearance at Sivaganga Tirumayam Court
கடந்த 2018 ஆம் ஆண்டு, திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு கோவில் நிகழ்ச்சியில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா கலந்துகொண்டார். அப்போது, மேடை அமைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது, எச். ராஜா காவல் ஆய்வாளர் மனோகரனை பார்த்து ஆக்ரோஷமாக கத்தினார். மேலும், நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசினார். இதனடிப்படையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் அடிப்படையில் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு, திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதிகள், எச்.ராஜா நேரில் வந்து ஆஜராக அறிவுறுத்தியிருந்த நிலையில், காவல் துறையினர் அவர் தலைமறைவாக இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும், பிடி வாரண்ட் கேட்டும் விண்ணப்பித்தனர். இதனால் சுதாரித்துக்கொண்ட எச்.ராஜா நான் தலைமைறைவாக இல்லை என்று கூறி, முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், அடுத்த விசாரணையின் போது நேரில் வந்து ஆஜராக உத்தரவிட்டனர். இந்நிலையில், முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திருமயம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகினர். அவருடன் மாவட்ட நிர்வாகிகள் பலரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
English Summary
H Raja gives Appearance at Sivaganga Tirumayam Court