ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை தாக்கிய மூன்று பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!
Guntas pounced on three men attacked govt officers
திருவாரூர் மாவட்டத்தை அடுத்த திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கை ஊராட்சி பகுதியில் இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி உள்ளனர். அரசுக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டியதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வட்டாட்சியர் கோட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடுகளை அரசு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.
அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த், மணிகண்டன், மாதவராமன் ஆகிய மூவரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் அரசு அதிகாரிகள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடுகளை இடிக்க பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இந்த இந்த சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனுக்கு தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும் தற்பொழுது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ அல்லது பொது மக்களை பாதிக்கும் வகையில் குற்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Guntas pounced on three men attacked govt officers