அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்.,!! கோவில்பட்டி அருகே போலீசாரே வாகனம் ஓட்டியதால் பரபரப்பு!!
government staffs protest in kovilpatti
கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த டிரைவர் வெள்ளாங்கோட்டை சுப்பையா மகன் கிருஷ்ணசாமி(40). சாத்தூர் பணிமனையை சேர்ந்த டிரைவர் சாத்தூர் வட்டம் வன்னிமடையை சேர்ந்த சந்தானமுத்து மகன் சொரூபராஜ்(40). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 நாட்களுககு முன் மதுரை செல்லும் பஸ் நிலையத்தில் இருந்து யார் முதலில் பஸ்சினை எடுத்து செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலையில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சினை எடுப்பதில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாத்தூர் பணிமனை சேர்ந்த டிரைவர் சொரூபராஜ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீஸார் பஸ் நிலையத்துக்கு வந்து கிருஷ்ணசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதில், காவல் நிலையத்தில் தன்னை போலீஸார் தாக்கியதாக கிருஷ்ணசாமி சக ஊழியர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசு பஸ் ஓட்டுநர்கள் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நின்ற அனைத்து அரசு பேருந்துகளை குறுக்கும் மறுக்குமாக நிறுத்தினர்.
மேலும், பேருந்து நிலையத்துக்கு வெளியேயும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இதனால் போலீஸாரே அரசு பஸ்களை இயக்கி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தினர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், காவல் ஆய்வாளர்கள் ஐயப்பன், சுதேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், சாத்தூர் பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் சொரூபராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
English Summary
government staffs protest in kovilpatti