சுங்கக்கட்டணம் இல்லாததால் அரசு பேருந்தையே திருப்பி அனுப்பிய சுங்கச்சாவடி ஊழியர்கள்! கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவித்த நடத்துனர்!
government bus not allowed in tollgate
அரசு பேருந்து ஒன்று திருவண்ணாமலையில் இருந்து பயணிகள் சிலருடன் ஓசூருக்கு புறப்பட்டுச் சென்றது. பேருந்து கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது அரசு பேருந்துகளுக்கு வழக்கமாக வழங்கப்படவேண்டிய சுங்கச்சாவடி பாஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சுங்கச்சாவடியை கடந்து செல்ல அரசு பேருந்துக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர். பேருந்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் இருந்ததால் நடத்துனரிடம் சுங்க கட்டணம் செலுத்த பணம் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பேருந்து ஓட்டுனர் தவிக்க, சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்தை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர், இதையடுத்து பேருந்தில் ஓசூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் நடுவழியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த பேருந்திற்கு பதிலாக ஓசூரில் இருந்து மாற்று பேருந்தை வரவழைத்து அதில் பயணிகளை ஏற்றி ஓசூருக்கு அனுப்பி வைத்துவிட்டு சுங்கக் கட்டணம் செலுத்த இயலாமல் தவித்த பேருந்து மீண்டும் திருவண்ணாமலைக்கே திரும்பி செல்ல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் அவற்றிற்கு மட்டுமே கட்டணம் செலுத்தி பாஸ் எடுத்திருப்பதாகவும் இனி வரும் காலங்களில் நடத்துனரிடமே சுங்க கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சுங்க கட்டணமே தேவையில்லை என பொது மக்களும், வாகன ஓட்டிகளும் தெரிவித்து வரும் நிலையில், குறைந்தபட்சம் அரசு பேருந்துகளுக்கு மட்டுமாவது சுங்க கட்டணத்தில் இருந்து சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
English Summary
government bus not allowed in tollgate