சற்றுமுன் : தேடப்பட்டு வந்த பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கைது!
former admk councilor jayagopal arrest in krishnagiri
சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த வழக்கில், தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக கவுன்சிலர் இல்ல திருமண விழாவிற்காக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் ஆனது, சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது காற்றில் பறந்து விழ அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு எடுத்து நடத்தி வருகிறது. மேலும் நேர்மையான விசாரணை நடக்க வேண்டும் என அனைத்து தரப்பினரையும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.
அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, தர்மபுரிக்கு பறந்தது தனிப்படை. இந்த நிலையில் தற்போது அவர் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்த போது, அவர் சென்னை காமாட்சி மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று மருத்துமனையில் சேர்த்ததாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், பேனர் அச்சடித்த அச்சகம் ஏற்கனவே நடவடிக்கைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
English Summary
former admk councilor jayagopal arrest in krishnagiri