ஊரை விட்டு ஒதுக்கிய கிராம பஞ்சாயத்து..!! ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய குடும்பம்..!! மயிலாடுதுறையில் பரபரப்பு..!!
fisherman family settled in mayiladuthurai district collector office
மயிலாடுதுறை மாவட்டத்தை அடுத்த பூம்புகாரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் வேதாரண்யம் அருகே வெள்ள பள்ளம் கிராமத்தில் தங்கி மீன் பிடித்து தொழில் செய்து வருகிறார். பூம்புகார் மக்கள் வெளியூர் சென்று தங்கி மீன் பிடிக்க கிராம பஞ்சாயத்து ஊர் கட்டுப்பாடு விதித்ததை மீறி லட்சுமண குடும்பத்தினர் வெளியூரில் தங்கி மீன் பிடித்து வந்துள்ளனர். லட்சுமணன் குடும்பத்தினரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
மேலும் லட்சுமணன் குடும்பத்தினருடன் பேசுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை லட்சுமணன் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் மூன்று ஆண்டுகளாகியும் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட லட்சுமணன் குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்பு உள்ள தேசியக்கொடி கம்பத்தின் கீழ் அடுப்பு வைத்து சமையல் செய்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் சமாதானம் ஆகாததால் வலுக்கட்டாயமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
English Summary
fisherman family settled in mayiladuthurai district collector office