நெருப்புடன் விளையாடியவருக்கு ஏற்பட்ட விபரீதம்..! அலறி துடித்த சம்பவம்.!
fire incident in chennai
சென்னையில் அம்பத்தூர் அருகே, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, வாய்க்குள் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு, தீயுடன் விளையாடிய இளைஞரின் முகத்தில் திடிரென்று தீப்பற்றி எரியும் அதிர்ச்சிகர காட்சி வைரலாகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அன்றைய நாள் இரவு சிலை ஊர்வலமாக சென்றது.
ஊர்வலத்தின் போது இளைஞர்கள் சிலர் தீப்பந்தத்தைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடி கொண்டிருந்தார்கள்.. அப்போது மணிகண்டன் என்ற இளைஞர் வாய்க்குள் மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு நெருப்புடன் விளையாடத் தொடங்கியிருக்கிறான்.
பின்னர் கையில் நெருப்பைப் பிடித்துக் கொண்டு, மண்ணெண்ணெய்யை ஊதிய உடன் தீப்பிழம்பு எழுந்ததைக் கண்டு ஊரில் உற்சாகம் ததும்பியது.
மறுபடியும் இரண்டாவது முறையாக அதேபோல் மணிகண்டன் செய்ய முயன்ற போது, நெருப்பு அவரது வாயைப் பற்றிக் கொண்டது. சிறிது நேரத்தில் நெருப்பு அணைந்துவிட்டது.
மறுமுறை நெருப்பை ஊதித் தள்ளியபோது, மண்ணெண்ணெய் வாயை விட்டு வெளியேறி முகத்தில் படவே, நெருப்பு பற்றிக் கொண்டது. இதனால், மணிகண்டனின் முகத்தில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாக மணிகண்டனை காப்பாற்றினர். முகம் எரிந்ததால் மணிகண்டன் வலியில் அலறினார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய பயிற்சி இல்லாமல், நெருப்புடன் விளையாடியதே விபரீதத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.