அரசுப்பள்ளி மாணவர்களிடையே தகராறு..11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.!
Fight between govt school students
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த ஆலந்துறை பகுதியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த ஆலந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் இரு பிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், கடந்த 8ஆம் தேதி பள்ளிக்கு வெளியே அந்த மாணவர்களின் இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளனர். அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் உட்பட 2 பேர் மற்றொரு பிரிவு மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி தன் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், 3 மாணவர்களுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதில், காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், இதில் ஆலந்துறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் நந்தகுமார் என்ற மாணவர் தலை, கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் மிகவும் மோசமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதுதொடர்பாக அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆலந்துறை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பள்ளியில் படித்த 17 வயது முன்னாள் மாணவர் உட்பட மூன்று மாணவர்களை கைது செய்து விசாரணைக்கு பின் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து ஆலந்துறை காவல்துறையின் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
English Summary
Fight between govt school students