பெண் சிங்கத்தையும் விட்டு வைக்காத கொரோனா! பரிதாபமாக உயிரிழந்த சோகம்!
female lion died for Covid19 in vandalur Zoo
தாம்பரம் அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றுக்கு பெண் சிங்கம் ஒன்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டது. உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கும் தடைவிதிக்கப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபிறகே அனுமதிக்கப்பட்டனர்.
அங்கே இருக்கும் பூங்கா அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன், விலங்குகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணித்து வந்தனர். தொடர் கண்காணிப்பில் இருந்த போது, கடந்த மே மாதம் 26-ஆம் தேதி நீலா என்கிற ஒன்பது வயது பெண் சிங்கத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
சிங்கத்திற்கு தொடர் இருமல் வந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு இருக்குமோ என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதனையடுத்து சிங்கத்தின் மாதிரிகளை, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் சிங்கத்திற்கு கொரோனா கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அங்கே இருக்கும் 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்பது சிங்கங்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிங்கங்கள் அனைத்தும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சிங்கம் நீலா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூங்காவின் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி விலங்குகள் பராமரிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளின் நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக பூங்கா மருத்துவர்கள் விலங்குகளின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
female lion died for Covid19 in vandalur Zoo