அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட கலாவதியான மாத்திரை, வயிற்று வலியால் துடித்த பெண்.!
expiry tablet give in thiruthani hospital
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பெண் நோயாளி ஒருவர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற சென்றிருக்கிறார். மருத்துவமனையில் இருந்த மருத்துவர் அந்த பெண்ணை பரிசோதனை செய்து பார்த்தபோது உடலில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மாத்திரைகள் மற்றும் பவுடர்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் வீடு திரும்பிய அந்த பெண் மாத்திரை உட்கொண்டுள்ளார். இதன் பின்னர் சிறிது நேரத்தில் காய்ச்சலுடன் கடுமையான வயிற்றுவலியால் துடித்த அந்த பெண், மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர் ஏற்கனவே தன்னிடம் கொடுத்த மாத்திரையை செவிலியர் ஒருவரிடம் காண்பிக்க, அதைப் பார்த்த செவிலியர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
காரணம் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட அந்த மாத்திரைகள் நவம்பர் மாதமே காலாவதியானது தெரியவந்தது. காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டதால் தான் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய செவிலியர், புதிய மாத்திரைகளை கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
நோயாளிக்கு அரசு மருத்துவமனையிலேயே காலாவதியான மாத்திரைகள் வழங்கப்பட்ட இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்று மருத்துவமனுக்கு வந்த எத்தனை நோயாளிகளுக்கு காலாவதியான மாத்திரைகள் வழங்கப்பட்டன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபரீதங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலாவதியான மாத்திரைகள் வழங்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்த திருத்தணி அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவர், அந்த பெண் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட காலாவதியான மாத்திரைகள் மொத்தம் மூன்று அட்டைகள் மட்டும் தான் என்றும் கவனக் குறைவாக இருப்பில் இருந்ததாகவும், அதில் ஒரு அட்டை மட்டும் தவறுதலாக அந்த நோயாளிக்கு வழங்கப்பட்டதாகவும் மற்ற இரண்டு அட்டைகளையும் அழித்துவிட்டதாகவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் தெரிவித்தார்.
இது போன்ற விபரீதங்களை தவிர்க்க, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலாவதியான மருந்து மற்றும் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பதை மாதம் ஒருமுறை மருத்துவமனை ஊழியர்கள் ஆய்வு செய்து அவற்றை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
expiry tablet give in thiruthani hospital