நீலகிரி || யானையால கூட ஓட முடியல? பொதுமக்கள் அவதி..!
elephant can't run? Public suffering
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கொளப்பள்ளி, டேன்டீ ரேஞ்ச் எண்.2, காவயல் வழியாக புஞ்சகொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் தங்கள் அடிப்படை தேவைக்காகவும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் கடைக்கு வந்து செல்லவும் மழவன் சேரம்பாடி வழியாக கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், அய்யன்கொல்லிக்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் மழவன் சேரம்பாடி முதல் புஞ்சகொல்லி வரை சாலை உடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது, இப்பகுதியில் பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி, குளம்போல் காணப்படுகிறது.
இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களால், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு நடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சகொல்லி வரை செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் சாலை பழுதடைந்து உள்ள நிலையில், யானைகளை துரத்தினால் கூட ஓட முடியாத அவல நிலையில் இருக்கிறது. குழிகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், மேலும் குழிகள் பெரிதாகி வருகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
English Summary
elephant can't run? Public suffering