இனி லஞ்சம் கேட்ப? சில்லரை காசு, தாம்பூலத்துடன் லஞ்சம் கொடுக்க ஊர்வலமாகச் சென்ற பாமகவினர்!!
Electricity Board official asked for bribe to replace faulty transformer
பழுதடைந்த மின்மாற்றி மாற்றி அமைக்க லஞ்சம் கேட்ட மின்வாரிய அதிகாரி!!
மகாபலிபுரம் அடுத்த தேவநேரி, அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்மாற்றி அடிக்கடி பழுது அடைவதால் மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த மின்மாற்றியை இடம் மாற்றக் கோரி பலமுறை அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
மின் மாற்றியை இடம் மாற்றி அமைக்க அதிகாரி ஒருவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மகாபலிபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் ரூ.14 ஆயிரத்தை சில்லரை காசுகளாக சேகரித்து உள்ளனர். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் சில்லரை காசு தட்டு மற்றும் தாம்பூல தட்டுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஒத்தவாடை தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று உள்ளனர்.
மின்வாரிய அலுவலகத்தின் நுழைவாயில் மற்றும் லஞ்சம் கேட்ட அதிகாரியின் மேஜை மீது என இரண்டு இடங்களில் சில்லறை காசு தட்டு மற்றும் தாம்பூல தட்டை வைத்துள்ளனர். இதனைப் பார்த்த மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தாம்பூலத்தையும் சில்லறை காசையும் வாங்க மறுத்து மின்வாரிய அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் மின்மாற்றி இடம் மாற்ற முதல் தவணையாக ரூ.14 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம். இனியாவது வந்து மின்மாற்றியை இடம் மாற்றுங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்த மேசையில் சில்லறை காசை வைத்து விட்டு சென்றுள்ளனர். விழி பிதுங்கிப் போன மின்வாரிய அதிகாரிகள் இந்த சில்லறை காசை என்ன செய்வது என்று தவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த மின்வாரிய உயர் அதிகாரிகள் பழுதடைந்த மின்மாற்றியை இடம் மாற்ற அதிகாரிகள் லஞ்சம் கேட்டன விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Electricity Board official asked for bribe to replace faulty transformer