குடலை பிடுங்கும் நாற்றம்.. குமட்டி செல்லும் பொதுமக்கள்.. தமிழகத்தில் காலநிலை காட்டிய அறிகுறி..?
dead-fish-floating-in-Papanasam-dam
பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்களால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்த போதிலும் இந்த ஆண்டின் கோடை தாக்குதல் மற்றும்கோடை மழை பெய்யாததால் அணைகளின் நீர்ப்பிடிப்புபகுதிகள் வறண்டு போய்விட்டன. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை.
அதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இதில்பிரதான அணையான பாபநாசம் அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி ஆகும்.
எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் பாபநாசம் அணை சிக்கி தவித்து வருகிறது.அணையின் தற்போதைய நீர்மட்டம் 9 அடியாக குறைந்துள்ள போதிலும் அணை இதுநாள் வரைக்கும் தூர் வாரப்படாததால் சில அடி உயரத்துக்கு சகதி நிரம்பி கிடக்கிறது.
இந்நிலையில், கொளுத்தும் வெயிலால் அணையில் தேங்கி கிடக்கும் தண்ணீருக்குள் ஏற்பட்டிருக்கும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மீன்கள் கொத்து கொத்தாக பரிதாபமாக செத்து மிதக்கின்றன.
அணைகளில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாததோடு இருக்கும் தண்ணீரும் வெகுவாக மாசடைந்து மீன்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மீன்கள் நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கத்தொடங்கின. இவ்வாறு இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள்அணையின் கரையோரம் மிதப்பதால் அவை அழுகி கடும்துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் அணையில் இருந்து திறந்து விடப்படும் சிறிதளவு தண்ணீரும் துர்நாற்றத்துடன் செல்வதால் தாமிரபரணியில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக மாறும் நிலை உள்ளது. செத்து மிதக்கும் மீன்களை அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் இதுவரைஎடுக்கவில்லை.
எனவே இந்த மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அணையில் உள்ள சகதியை அகற்றி தூர்வார வேண்டும்.
இதன் மூலம் தண்ணீர் கொள்ளளவு அதிகரிப்பதோடு அணையில் உள்ள நீர் சுகாதாரமானதாக மாறும் என்றுசமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
English Summary
dead-fish-floating-in-Papanasam-dam