தந்தையை அரிவாளால் வெட்டிய மகள்..கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறை..!
daughter kill the father sickle
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி அருகே உள்ள ஞானியார் குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி வயது 63 . இவர் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் தியாகு என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அவருக்கு உதவியாக அவரது மகள் அமுதா வயது 35 இருந்து வந்தார். இந்நிலையில், இந்த தோட்டத்தை குத்தகைக்கு எடுக்க தனது மகளின் நகையை வாங்கி வங்கியில் அடகு வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நகை அடகு வைத்து ஐந்து மாதங்களுக்கு மேலானதால், நகையை திருப்பித் தருமாறு அமுதா தந்தையிடம் கேட்டு வந்தார். ஆனால் தந்தை திருப்பிக் கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்ததனால் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அமுதா தந்தையின் பைக் சாவியை பிடுங்கி வைத்து நகையை திருப்பி தந்து விட்டு சாவி வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் தந்தை அமுதா வைத்திருந்த சாவியை எடுத்து வண்டியை ஓட்ட முயன்றதை அறிந்த அமுதா தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அந்த தகராறில் ஏற்பட்ட பிரச்னையில் அமுதா தந்தை ஆறுமுக பாண்டியை அவதூறாக பேசி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .
இதுகுறித்து ஆறுமுக பாண்டியின் மனைவியுமான, அமுதாவின் தாயுமான வாசுகி (வயது 60) சாத்தான்குளம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் பாஸ்கரன், அமுதாவின் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை நெல்லை கொக்கரகுளம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இன்று காலை ஆறுமுக பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சாத்தான்குளம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
daughter kill the father sickle