தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமா?!
corona vaccine NOT MUST
இந்தியாவில் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்துக்கு இன்று காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,
"தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாங்களாக முன் வருவார்களுக்கே தடுப்பூசி போடப்படும். புனேவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் காலை பத்து முப்பது மணி அளவில் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளன.
முதல்கட்டமாக தமிழகத்துக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், சீரம் நிறுவனத்திடம் இருந்து 5,36,500 தடுப்பூசிகள் வருகின்றன. பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் ஆகும்.
சென்னை விமான நிலையத்திலிருந்து 10 மையங்களுக்கு தடுப்பூசி தடுப்பு மருந்துகள் அனுப்பப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் போடப்படும். 30 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும்" என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்