#தமிழகம் || இறுதி தேர்வு எழுத அனுமதி மறுப்பு : மடியில் பச்சிளம் குழந்தையுடன் கல்லூரி மாணவி தர்ணா போராட்டம்.!
college girl protest for sem exam
ராணிப்பேட்டை அருகே கல்லூரி மாணவியான பச்சிளம் குழந்தையின் தாய், தன்னை கல்லூரி இறுதியாண்டு தேர்வு எழுத அனுமதிக்குமாறு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆயல் கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி. 20 வயதாகும் இவர் வாலாஜாபேட்டை அரசு மகளீர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே, தேவ அன்பு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததை தொடர்ந்து, படிப்பை தொடர நினைத்த காமாட்சி, கல்லூரிக்கு மீண்டும் வந்தார். இதைக்கண்ட பேராசிரியர்கள் பச்சிளம் குழந்தையுடன் கல்லுரிக்கி வரக்கூடாது என்று அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக மாணவி காமாட்சி விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். இதனிடையே இறுதியாண்டு தேர்வு எழுத காமாட்சி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேர்வு கட்டணத்தை செலுத்தி உள்ளார்.
ஆனால் இறுதி ஆண்டு தேர்வுக்கு முன்பாக நடைபெறும் திருப்புதல் தேர்வை எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், வருகைப்பதிவேடு குறைவாக உள்ள காரணத்தினால் காமாட்சி செலுத்திய தேர்வு கட்டணத்தை அவரிடமே ஒப்படைத்த பேராசிரியர்கள், நீங்கள் இறுதியாண்டு தேர்வு எழுத முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி தன்னை இறுதியாண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி தர்ணாவில் ஈடுபட்டு வந்தார்.
மடியில் பச்சிளம் குழந்தையை போட்டுக்கொண்டு காமாட்சி போராட்டம் நடத்தி கொண்டிருக்கும்போது, பேராசிரியர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்ததால், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காமாட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், மாணவி காமாட்சி தனது போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினார்.
English Summary
college girl protest for sem exam